பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நரிக்குறவ மக்களுடன் இணைந்து பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய உரையை கேட்டு மகிழ்ந்தார்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திமோடி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.
காமல்வெல்த் போட்டியில் டீம் இந்தியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. கொரோனா காலத்துக்கு மத்தியில் மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் உரையை சென்னை மாடம்பாக்கம் மப்பேடு பகுதியில் நரிக்குறவ மக்களுடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அண்ணாமலை, நமது நரிக்குறவர் சகோதர சகோதரிகளுடன் இணைந்து சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் 91வது பகுதியில் பிரதமர் ஆற்றிய உரையை கேட்டு மகிழ்ந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியர் கொடுங்கோலன் ஆஷின் இறுதியை உறுதி செய்த சுதந்திரப் போராட்ட வீர்ர் வாஞ்சிநாதனின் நினைவாக தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தை பற்றி பிரதமர் மோடி இன்று தனது உரையில் குறிப்பிட்டார். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இது போன்ற போட்டிகள் நடப்பது நமது நாட்டிற்கு கவுரவம் சேர்க்கும் விதமாக அமைகிறது என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இல்லம் தோறும் மூவர்ணக் (தேசியக்கொடி) கொடியை பறக்கவிட்டு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சிந்தனையை நிலைநாட்டும் விதமாக சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று நமது நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றியதையும் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்