ஆந்திராவில் அமைச்சராக பதவியேற்ற நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, இளைஞர் நலன் மற்றும் கலை பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மருமகள் ஆந்திராவின் அமைச்சரானதை விளக்குகிறது இந்த தொகுப்பு…
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பிறந்த ரோஜா முதலில் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், 1990-களில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக அறியப்பட்ட ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்த செம்பருத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்த ரோஜா, தன்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 1999-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துகொண்ட நடிகை ரோஜா, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்தார். இதனையடுத்து 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியிலும், 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியிலும் போட்டியிட நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
எனினும், தங்களுடைய தொகுதியில் ரோஜா போட்டியிட்டதற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் நடிகை ரோஜா பரப்புரை மேற்கொண்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றாலும், தான் போட்டியிட்ட தொகுதிகளில் நடிகை ரோஜா தோல்வியை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகிய ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் 2009-ம் ஆண்டு இணைந்தார். தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏவாக ஆந்திர சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் நடிகை ரோஜா. அரசியலில் ராசி இல்லாதவர் ரோஜா என்று அப்போது எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு தனது வெற்றிகளின் மூலம் இன்று வரை பதிலடி கொடுத்து வருகிறார்.
ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முதன் முறையாக வெற்றி பெற்றது. இதன் மூலம் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். மாநிலம் முழுவதும் நடிகை ரோஜா மேற்கொண்ட மாபெரும் பரப்புரையே ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் வெற்றிக்கு முதன்மை காரணமாக அமைந்தது.
2019-ம் ஆண்டே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு பிரிவு தலைவர் எனும் முக்கிய பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற போது இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி, கடந்த 7-ம் தேதி 24 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் தான், தற்போது ஆந்திராவின் அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சுற்றுலா, இளைஞர் நலன் மற்றும் கலை பண்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அரசியல் பயணத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தனது ரோல் மாடல் என்று அடிக்கடி குறிப்பிட்டுள்ள நடிகை ரோஜா, தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உயர்ந்து வருகிறார்.
– வசந்தன்