பேராவூரணி அருகில் 750 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கஞ்சா வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், தொடர்ந்து சமூக விரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் தமிழக காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கல்லூரிகளில் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட 750 கிலோ கஞ்சா பேராவூரணி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கஞ்சா வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் ஆந்திராவில் இருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல. காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவைவிட 100 மடங்கு கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். காவல் துறையினரின் நடவடிக்கை காரணமாக இது 90 மடங்காகவோ, 95 மடங்காகவோ குறைந்திருக்கலாம். ஆனால், தடைபடவில்லை.
போதைப் பொருட்களுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிந்த பிறகும், இலங்கைக்கு கடத்துவதற்காக 750 கிலோ கொண்டுவரப்படுகிறது என்பதிலிருந்தே கஞ்சா வலைப்பின்னல் எவ்வளவு வலிமையாக செயல்பட்டு வருகிறது என்பதை அறியலாம். புழக்கத்தில் விடப்படும் கஞ்சாவை பிடிப்பது பத்திரிகை செய்திகளுக்கு மட்டும் தான் பயன்படும். கஞ்சா வலைப்பின்னலை கண்டறிந்து அதை அடியோடு ஒழிப்பதுதான் கஞ்சா போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த உதவும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா