விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்தார். இந்த ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த சபீருல்லா காணாமல் போனதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 10ம் தேதி கெடார் போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆசிரமத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்து சபீருல்லா உள்பட 11க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது உள்ளிட்ட தகவல்கள் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து ஜூபின் பேபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையும் படியுங்கள்: விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்
இதனிடையே சபீருல்லாவை மீட்டு தரக்கோரி நண்பர் ஹலிதீன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், கர்நாடகாவில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் சபீருல்லா கானின் உடலோடு ஒத்துபோவதாக கூறப்பட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கு – வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு
மேலும் அன்பு ஜோதி ஆசிரமத்தைச் சேர்ந்த எட்டு பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜீபின், பேபி மரியா, சதீஷ்குமார் ஆகிய மூவரை மார்ச் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி புஷ்பரானி உத்தரவிட்டனர். மேலும் பணியாளர்கள் பிஜீமோகன், கோபிநாத், அய்யப்பன் ஆகிய மூவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
– யாழன்







