கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு, விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
உச்சநிதிமன்ற உத்தரவுப்படி உரிய நீரை கர்நாடாகா வழங்காமல் பிடிவாதம் பிடித்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தரப்பிலும் தமிழகத்திற்கு நீர் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவையும் பொருட்படுத்தமல் கர்நாடக அரசு அலட்சியப்படுத்தியது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து கர்நாடக அரசிடம் இருந்து உரிய நீரை பெற வேண்டும் என தமிழ்நாடு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், மாதந்தோறும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது.
இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை எதிரொலியாக, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 9 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 14 ஆயிரத்து 300 கன அடியாக உயர்ந்துள்ளது.







