காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 23 ஆம் தேதி காஷ்மீர் செல்கிறார்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் தாக்கி வருகின்றனர். வெளிமாநில மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைத்து கொன்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றும் விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 23 ஆம் தேதி காஷ்மீர் செல்கிறார். 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் அமித் ஷா இப்போதுதான் முதன்முறையாக காஷ்மீர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








