இயக்குனர் அமீர் என் மீதும் என் படத்தின் மீதும் வைத்த குற்றச்சாட்டினை இன்னும் மூன்று தினங்களில் நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் தெரிவித்த கருத்தினை பின்வாங்க வேண்டும் என பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: பகாசூரன் திரைப்படம் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய நல்ல கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் இயக்குனர் அமீர் பகாசூரன் படத்தை பார்க்காமல் தவறான கருத்தை தெரிவித்து வருகிறார்கள். படம் திரையங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது இதுபோன்று கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
நான் யாரிடமும் பணம் வாங்கி இந்த படத்தை இயக்கவில்லை. கடன் வாங்கிதான் படத்தை இயக்கி இருக்கிறேன். நான் வெளியே 2 பேரிடம் பணம் கடன் வாங்கிதான் படம் எடுத்துள்ளேன். படத்திற்கு நானே தான் தயாரிப்பாளர். நான் எந்த கட்சியை சார்ந்தவர்களிடமும் பணத்தை வாங்கி படம் எடுக்கவில்லை.
இயக்குனர் அமீர் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டினை வைக்க வேண்டாம். நான் வன்னியர் ஜாதியை முன்வைத்து, இந்து மதம் முன்வைத்து எடுத்த படத்தினை திரௌபதி, ருத்ர தாண்டவம் படத்தை தான் பாமக தலைவர் அன்புமணி, ஹெச்.ராஜா பார்க்க வேண்டும் என நினைத்தேன். பகாசூரன் படத்தினை அனைவரையும் பார்க்க அழைக்கிறேன். ஆனால் தேவை இல்லாமல் படத்தை பார்க்காமல் தவறான கருத்துக்களை கூற வேண்டாம். இன்னும் மூன்று நாட்களில் அமீர் தனது கருத்தினை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உரிய ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்.
பகாசுரன் படத்திலும் நான் பெண்கள் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது போல தவறான கருத்தினை பதிவு செய்து வருகின்றனர். பகாசுரன் படத்தினை ஒரு மாநில தலைவராகவும் தேசிய கட்சியை சார்ந்தவராகவும் அண்ணாமலை இந்த படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்தார்.
அண்மைச் செய்தி:வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
பகாசூரன் படத்தில் நான் இந்துதுவத்தையும் ஜாதியையும் வைத்து படம் எடுக்கவில்லை. திரௌபதி படத்தில் தான் ஜாதியை முன் வைத்து எடுத்தேன். பகாசுரன் பெற்றோர்களுக்கான பெண் குழந்தைகளுக்கான சிறந்த படம். நான் சொல்வதை மட்டும் கருத்தாக வைத்துக் கொள்ள வேண்டும், தேவையில்லாத தவறான கருத்து பதிவுகளை யாரும் பரப்ப வேண்டாம். நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லவே நான் கடன் வாங்கி படம் எடுக்கிறேன். இவ்வாறு இயக்குநர் மோகன் ஜி தெரிவித்தார்.







