அமெரிக்காவில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேன் மாகாணத்தின் 2வது அதிக மக்கள்தொகையைக் கொண்ட லூயிஸ்டன் நகரின் பௌலிங் மையம் மற்றும் உணவகத்தில் ராபர்ட் கார்ட் என்ற 44 வயது நபர் கடந்த 25-ம் தேதி புதன்கிழமை மாலை (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 22 பேர் உயிரிழந்தனர். இது தவிர, மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் 2 நாள்களாக தீவிரமாகத் தேடி வந்தனர். அவரை தேடும் பணி நடந்து வந்தது. இதனால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நகரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது இல்லங்களுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் தொடர்ந்து இரண்டு நாள்கள் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொலையாளி என குற்றம்சாட்டப்பட்ட ராபர்ட் கார்ட், அப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவர் எனவும், அவர் ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் எனவும் கூறப்பட்டது. மேலும் ராபர்ட் கார், ராணுவத்தில் பயிற்சி பெற்ற துப்பாக்கிப் பயிற்சியாளர் என்று காவல்துறை பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
இவர் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலுள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சியில் இறந்து கிடந்தார் என்று ஜேனட் மில்ஸ் ஆளுநர் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். புதன்கிழமை மாலை இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து தென்கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் ஆண்ட்ரோஸ்கோகின் ஆற்றுக்கு அருகே இரவு 7:45 மணியளவில் கார்டு உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக மேன் பொதுப் பாதுகாப்புத் துறையின் ஆணையர் மைக் சாசுக் கூறினார்.
பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமையாகக் கருதப்படும் அமெரிக்காவில், தனி நபர்கள் இதுபோன்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்துவதும், இதில் ஏராளமானவர்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நடந்து வருகின்றன.