அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி என அகழாய்வு பணி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே நம்பியாற்று படுகையில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இங்கு அகழாய்வுப் பணி 2021-ம் ஆண்டு தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், உள்ளிட்ட 1,009 அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் துலுக்கர்பட்டி அகழாய்வு குறித்து மாநில நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது :
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.