காவிரி நதி மீது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் உரிமை உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, தமிழ்நாட்டின் நலனுக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் முதலமைச்சர் எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டியதாக தெரிவித்தார். மேலும், நதி நீர் எங்கு உற்பத்தியானாலும், அது ஓடுகின்ற எல்லா மாநிலத்திற்கும் சொந்தமானது என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காவிரி நீர் மீது யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லமுடியாது எனவும், எல்லா மாநிலத்திற்கும் காவிரி நதிநீர் மீது உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், தார்மீக நெறியை ஏற்றுக்கொண்டு மேகதாது பிரச்னையை அணுக வேண்டும் என டி.ராஜா தெரிவித்தார்.







