ஷங்கர் படத்தில் ஹீரோயினாகிறார் இந்தி நடிகை ஆலியா பட்?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில், பிரபல இந்தி நடிகை ஆலியா பட், ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும்’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். இதில்…

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில், பிரபல இந்தி நடிகை ஆலியா பட், ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும்’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். இதில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உட்பட பலர் நடித்து வந்தனர். இந்நிலையில், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதனால் படத்தைத் தொடங்க லைகா நிறுவனம் காலதாமதம் செய்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். பான் இந்தியா முறையில் மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. அடுத்து அந்நியன் படத்தை இந்தியில் அவர் ரீமேக் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை நிறைவு செய்யாமல், மற்ற திரைப் படங்களை இயக்க, ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில், பிரபல கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஹீரோயினாக, பிரபல இந்தி நடிகை, ஆலியா பட் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜமவுலி இயக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராம்சரண் ஜோடியாக ஆலியா பட் நடித்து வருகிறார். அதில் அவர் சிறப்பாக நடித்ததைக் கண்டு, ராம் சரண் அவரை இந்தப் படத்துக்குப் பரிந்துரைத்தாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.