மணமகள் அணிந்திருந்த தங்க நகைகளை திருமணம் முடிந்ததும் திருப்பிக் கொடுத்த மணமகனின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
கேரளாவில், வரதட்சனை கொடுமை காரணமாக இளம் பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், விஷ்மாயா, அர்ச்சனா, சுசித்ரா ஆகிய பெண்கள், வரதட்சனை கொடுமையால் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் கேரள இளைஞர் ஒருவர், திருமணம் முடிந்ததுமே வரதட்சனையாக கொடுக்கப்பட்ட தங்க நகைகளை, மணமகள் வீட்டாரிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள நூரானட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் சத்யன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ருதி ராஜ் என்பவருக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த வியாழக்கிழமை இவர்கள் திருமணம் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்தது.
திருமணத்துக்கு முன்பே, மணமகன் சதீஷ் வரதட்சனை ஏதும் வேண்டாம் என்று மணமகள் வீட்டில் கூறினார். ஆனால், திருமணத்தன்று 50 பவுன் நகையுடன் மண மேடை ஏறினார் மணமகள்.
இந்நிலையில் திருமணம் முடிந்ததும் அந்த நகைகளை மணமகள் வீட்டில் ஒப்படைத் தார் சதீஷ். இது தொடர்பான செய்திகள், வெளியானதும் சதீஷூக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.








