நீட் தேர்வுக்கு என்றும் அதிமுக எதிராக இருக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய சட்ட முன்வடிவினை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து இது சம்பந்தமாக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்க அனைத்து கட்சி சட்டமன்ற குழு தலைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை என அறிவித்திருந்தது. அதேபோல அதிமுகவும் தற்போது அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை செய்தியாளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில், “அதிமுகவைப் பொறுத்தவரையில்,
நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம், நாளையும் எதிர்ப்போம். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரை, அதிமுக உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தங்களின் 3.2.2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, ஆளுநர் தமிழக அரசிற்கு திரும்பி அனுப்பியுள்ள நிலையில்,
இதுதொடர்பாக 5.2.2022 அன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.
“நீட் தேர்வு ரத்து” குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
அதிமுகவைப் பொறுத்தவரை “நீட்” தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே “நீட் தேர்வு ரத்து” தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அதில் தெரிவித்துள்ளார்.