இரட்டை இலை சின்ன வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.5000 கோடி செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ரூ.1,000 கோடி செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், கட்சியில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையிலான பிரச்னை சாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். அதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா? கூட்டம் நடக்கும் பகுதியில் வசிக்கிறாரா? என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், பொது நல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.