அதிமுக என்பது கட்சியே கிடையாது என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில்
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற்றும் அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட மண்டல அளவிலான
கைப்பந்துபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்ததுடன், சிறப்பாக விளையாடிய மாணவ, மாணவியர்க்கு பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “8 கோடி பேர் வசிக்கக் கூடிய தமிழ்நாட்டில் குறை இல்லாமல் ஆட்சி என்பது நடத்தமுடியாது. இருந்த போதிலும் அதனையும் மீறி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்பவர்களைப் பற்றி கவலை இல்லை. எங்களுக்கு மக்களின் நலனே முக்கியம். முதலமைச்சர் ஸ்டாலின் பின்னால் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
அதிமுக என்பது கட்சியே கிடையாது. திராவிட தலைவர்கள் இறந்த பின்னர், திராவிட இயக்கங்கள் ஒன்றாகிவிட்டது. தற்போது ஒரே திராவிட இயக்க தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். அவர் பின்னால் செல்வதே திராவிட தொண்டர்களின் கடமை” என்று தெரிவித்தார்.







