அதிமுக உடையவும் இல்லை… சிதறவும் இல்லை…. என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதேபோல வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பூத் கமிட்டியில் அனைத்து அணியைச் சார்ந்த நிர்வாகிகளை உள்ளடக்கி அமைக்க வேண்டும் என ஈபிஎஸ் கடந்த கூட்டதில் வலியுறுத்தி இருந்த நிலையில் அந்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான இலச்சினையை ( LOGO ) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். மேலும் இந்த மாநாட்டிற்கு ” வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு “ என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது..
“இன்றைய தினம் மாவட்ட செயல்லார்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்தும், எவ்வாறு நடத்த உள்ளது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
அதிமுக பல சரித்திர சாதனை படைத்துள்ளது. 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்துள்ளர்கள். நாட்டிலேயே 75 நாட்களில் 1 கோடி 60 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ந்து சரித்திரம் படைத்துள்ளோம். அதேபோல தமிழகத்தில் அதிக உறுப்பினர் கொண்டு ஒரே கட்சி அதிமுகதான். சில நபர்கள் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என்பதற்காக திமுகவிற்கு பி டீம் ஆக செயல்பட்டார்கள். அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை.
மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசியல் செய்வதற்கு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஒரு நாடகத்தை நடத்துகிறது.
திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. அந்த முதலமைச்சரை சந்தித்து இதுவரை ஏன் தமிழ்நாடு அரசு கேட்கவில்லை. ஜூன் மாதம் தருவதாக சொன்ன தண்ணீரை ஏன் இதுவரை தரவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக செய்யப்பட்டது. தமிழ்நாடுதான் கொரோனா பாதிப்பை கட்டுப்படுதியதில் முதல் இடம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தக்காளி மட்டுமல்ல சின்ன வெங்காயம் உள்ளிட்ட அனைத்தும் விலையும் உயர்ந்துள்ளது.
மாமன்னன் படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் என்ன..? அது மக்கள் பசியை போக்கவா போகிறது. தனபாலை சபாநாயகர் இருக்கையில் இருந்து இறக்கி, அவரது சட்டையை கிழித்தது திமுக தான். தேர்தல் வரும் பொழுது கூட்டணி பற்றி, உங்கள் அனைவருக்கும் தெரிவிப்போம்.” என இபிஎஸ் தெரிவித்தார்.