அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று இருதரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததால், வருவாய் துறை அதிகாரிகள் கட்சி அலுவலகத்தை சீல் வைத்து சென்ற நிலையில், இன்று 2-வது நாளாகவும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். அப்போது, கல்வீச்சு, வாகனங்களை சேதப்படுத்தியதால் வன்முறை களமாக மாறியது.
இதையடுத்து, அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். மோதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, வருவாய்துறையினர் சென்று அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர். மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விட கூடாது என்பதற்காக பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் அதிமுக தலைமை அலுவலகம் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. ராயப்பேட்டை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவையின்றி அங்கு யாரும் செல்லக்கூடாது என காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நின்று எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக வரும் 25 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்புக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








