பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் ஓபிஎஸ்; வழக்கு நாளை விசாரணை

ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் மூலம் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்படும் என்ற அறிவிப்பும் உயர்நீதிமன்ற உத்தரவு முரணானது என்பதால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை தண்டிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு நேற்று இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விசாரிக்க முடியாது என்றும், இதுதொடர்பாக தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் எனக்கு கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையீடு வைத்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.