அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைரமுத்து என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீா்ப்பளித்தாா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், செப்டம்பர் 5ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன் பி.வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை கோரப்பட்டுள்ளது.
இதே வழக்கில் கடந்த 4ம் தேதி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.