முக்கியச் செய்திகள் தமிழகம்

லஞ்ச ஒழிப்பு வளையத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ; குவித்த சொத்து மதிப்பு என்ன ?

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதற்கு ஆபரேஷன்  மினிஸ்டர்ஸ் என லஞ்ச ஒழிப்புத்துறை பெயரிட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை 7 அதிமுக முன்னாள் அமைச்சர்களில் இல்லங்கள் மற்றும் அவர்கள் சம்பந்தபட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையானது நடைபெறுகிறது. இந்த வகையில்  சட்டத்திற்கு புறம்பாக, அளவுக்கு அதிகமாக குவித்த சொத்துக்களின் மதிப்பு ரூ.186 கோடியே 81 லட்சம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த ஓர் கழுகு பார்வை.

சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர்  மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக அவர் தொடர்புடைய இடங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. இவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.  ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், தங்கமணி, காமராஜ் ஆகிய 7 முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது வருமானத்துக்கு அதிகமாக 6.11 கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்திருப்பதாகக் கூறி அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 22.07.2021 முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 51.09 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாகக் கூறி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 15.03.2022 முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, 84 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு 34 லட்சம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 27.78 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு செய்து கடந்த 16.09 2021 அன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, 34 லட்சம் ரொக்கம், 9 சொகுசுக் கார்கள் உள்பட சொத்து ஆவணங்கள், 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 1 கோடியே 80 லட்சம் அந்நிய செலாவனியாக முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை குவித்ததாகக் கூறி அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா அகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 18.10.2021 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 4,870 கிராம் தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி அவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 21.1.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி 2 கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைபோல முன்னாள் அமைச்சர் தங்கமணியும் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சம் ரூபாய் சொத்துக்கள் குவித்துள்ளதாகக் கூறி அவர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 15.12.2021 அன்று சோதனை நடத்தினர். சோதனையில் 2 கோடியே 16 லட்சம் பணம், 1.13 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குள்ளான 7 அமைச்சர்களும் சேர்த்து மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.  அதேபோல சோதனை நடைபெற்ற 7 முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 6 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் பணம், 28.181 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடர்பாக மொத்தம் 7 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது 811 கோடி ரூபாய்க்கான டெண்டர் முறைகேடு வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 315 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை வளையத்திற்குள் பாஸ்கரை கொண்டு வந்துள்ளனர்.

இரா. சுப்பிரமணியன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரிவினைவாதம் பேசும் ஆட்சி திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு

Dinesh A

அச்ச உணர்வுடன் முகநூலை பயன்படுத்தும் பெண்கள்

G SaravanaKumar

”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!

Jayapriya