அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு அக்னி பாதை (அக்னிபாத்) என பெயரிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார்.
சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் வன்முறை ஏற்படுத்துவதை விரும்பவில்லை என்றும், அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த திட்டத்தை உருவாக்க ஒன்றரை வருடங்கள் அதில் பணியாற்றியதை நினைவு கூர்ந்த அவர், இப்போது இந்தத் திட்டம் நிறைவடைந்து அறிமுகப்படுத்தப்படுவதை காண்கிறோம் என்றும் கூறியுள்ளார்.