சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை ஒட்டி இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர்,கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 259 வீடுகள் உள்ளது. பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் அந்த நோட்டீசை வாங்க மறுத்த அப்பகுதி மக்கள், இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பினர். ஆனால் அந்த கோரிக்கை மனுக்கள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
நேற்று காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது 65 வயது மதிக்கதக்க கண்ணையா என்ற முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் பரபரப்பானது,
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு மூத்தவழக்கறிஞர் காலின் கோன்சால்வஸ் ஆஜரானார். அப்போது, சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும், தற்போது பொதுத்தேர்வுகளும், ஆண்டு இறுதி தேர்வுகளும் நடந்து கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.