இந்தியாவில் மலிவு விலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி சாமானிய மக்களுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 15 முதல் 44 வயது வரையிலான பெண்களை மிக அதிக அளவில் தாக்கும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பபை வாய் புற்றுநோய் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது 15 முதல் 44 வயது வரையிலான இந்திய பெண்களில் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை புனேயை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் உள்நாட்டில் உருவாக்கப்படும் முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி என்ற சிறப்பை இது பெறுகிறது. இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான உள்நாட்டு, மலிவு விலை தடுப்பூசி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பயோடெக்னாலஜி துறைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த தடுப்பூசியை மலிவு விலையில் சாமானிய மக்களுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என தெரிவித்தார்.
இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி ஆதர் பூனவாலா பேசும்போது, இந்தியப் பெண்களுக்கு இந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் ரூ.200 முதல் ரூ.400-க்குள் கிடைக்கும். இருப்பினும் அரசுடன் விவாதித்து விலை இறுதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 20 கோடி தடுப்பூசிகளை விற்பனைக்கு கிடைக்கச் செய்வது என இந்திய சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.