மின் தட்டுப்பாட்டை தவிர்க்க அமைச்சர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.   தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில்…

தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது புதிய திட்டங்கள் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி கிடைப்பதால், மின் தட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின்சார தேவையை சமாளிக்க வேண்டி உள்ளது.

 

இதனால், மின் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தேவையை உணர்ந்து திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

 

அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கோடை காலத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புத் திட்டம், தொழில்நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்தும் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின் மோட்டார்கள் பொருத்தும் பணி, மின்சார வாரியங்களில் ஏற்படும் விபத்துகள், அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை சரி செய்வது குறித்தும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.