கடந்த ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்
சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு கூட்டப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவில் கடந்த ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று மீண்டும் நடைபெற்றது.
இபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு ஜூலை 1ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என தெரிவித்தனர்.
கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த
புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா எனவும் தனி நீதிபதி தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
ஜூன் 23 ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம்
உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த
நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பளித்தைச் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர்கள், இருவரும்
இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள் எனவும், தனி நீதிபதி உத்தரவு காரணமாக
கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே
தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் உள்ளதாலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர், அடிப்படை உறுப்பினர்களை விடபொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினர். அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும், இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்ததாகவும் அவர்கள் வாதிட்டனர்.
மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ நோட்டீஸ் அனுப்பவில்லை என ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால்
மட்டுமே பதவிகள் காலியானதாக கூறலாம் என்று தெரிவித்த ஓ.பி.எஸ் தரப்பு,
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால்
அந்த பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும்
வாதிடப்பட்டது.
ஓ.பி.எஸ். தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, பொதுக்குழு உறுப்பினர்
வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குரியவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய
பின் பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை மாலை 3
மணிக்குள் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும்
உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.










