தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பேருந்துகளை எவ்வாறு பாதுகாப்பான முறையில் ஓட்டுவது என்பது குறித்த தகவல்கள் அடங்கிய ஓட்டுநர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டது. பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 110 விதியின் கீழ், ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பஸ்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,013 டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களை வாங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகள் மறுசீரமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் கிராமப்புற ஏழைகளுக்கு சேவை செய்யும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும் இலவச பேருந்து பயணத்தின் மூலம் 2 ஆயிரம் கோடி அளவிலான பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், போக்குவரத்துத்துறை பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டே வருகிறது. பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பான முறையில் ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க ஏதுவாக, ஓட்டுநர் கையேடு வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பயணம் செய்ய 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.







