இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான நயன்தாரா, ’ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக, பல படங்களில் நடித்த நயன்தாரா டாப் ஹீரோயினாக உயர்ந்தார். ’நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது, அவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.
திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருவதாகக் கூறப்படும் இவர்கள், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். தனி விமானத்தில் கேரளா சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் ஜோடியாக செல்லும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன், நயன்தாராவின் கையை விக்னேஷ் சிவன் கோர்த்திருப்பது போன்றும் இருவரும் ஒரே மாதிரியாக மோதிரம் அணிந்திருப்பது போன்றும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. அதைக் கண்ட நெட்டிசன்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறிவந்தனர். ஆனால், இதுகுறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில்,சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை நயன்தாரா, தனது கையில் இருப்பது நிச்சயதார்த்த மோதிரம்தான் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் முதன்முதலாக தனது நிச்சயதார்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் திருமணம், விரைவில் நடக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.









