பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவர் நண்பரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுள்ளது என்றும் அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்ற நீதிபதி, நடிகை மீரா மிதுன், அவர் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.








