சென்னையில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குன்றத்தூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை பார்த்த அரசு பேருந்தை வழிமறித்ததோடு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் அவதூறாக பேசி அர்ச்சனை செய்தார் நடிகை ரஞ்சனா. மேலும் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார்.
வழக்கறிஞரான ரஞ்சனா நாச்சியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த செயலை ஒரு தரப்பினர் சிங்கப் பெண் என்று புகழ, மற்றொரு தரப்பினர் அத்துமீறிய மாணவர்களை தாக்கிய ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
https://twitter.com/Piramachari/status/1720381711962493365
இதனைத் தொடர்ந்து அரசு பேருந்தை வழிமறித்தது, ஓட்டுநர், நடத்துநரை அவதூறாக பேசியது, மாணவர்களை தாக்கியது உள்ளிட்ட புகாரின் பேரில் நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
தலைமறைவாக இருந்த ரஞ்சனா நாச்சியாரை இன்று காலை போலீசார் கைது செய்ய முப்பட்டபோது போலீசார் உடன் வரமாட்டேன் என அடம்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை பொருட்படுத்தாத பெண் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







