நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கேரளாவிற்கு கனிம
வளங்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின்
சார்பில் கண்டன பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போது கூறியதாவது:
மலை வளம் மக்களுக்கானது, அது வியாபாரப் பொருள் அல்ல. அதனை கொண்டு சென்று அண்டை மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்குக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல் உருவாகிறது. காசு கொடுத்து வாக்கு பெற்ற எந்த அரசியல்வாதிகளுக்கும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிற எண்ணம் வராது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, கடந்த
இரண்டு தினங்களில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 3 கொலைகள் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் எல்லா தலைவர்களை பற்றியும் படித்து தெரிந்து கொண்டு, யார்
நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, ஹிட்லர் உட்பட அனைத்து தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற எல்லா தலைவர்களின் கருத்தையும் படித்து தெரிந்து கொண்டு நல்லதை
மட்டும் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்ற பயத்தினால் தான் இது போன்ற வேலைகளில் தமிழக அரசு வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அவர் ஊழல் மூலம் பெற்ற பணத்தை எப்படி பிரித்து கொடுத்தார் என்பது வெளிவரும். அதனால் முதல்வர் பயப்படுகிறார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை பிரதமர் வேட்பாளராக
அறிவிக்க பாஜகவுக்கு துணிவிருந்தால், தாங்கள் கண்டிப்பாக அவர்களை ஆதரிக்கிறோம். விஜய் அரசியலுக்கு வருவதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேற, நான் வேற எங்களுக்குள்ள பந்தம் அண்ணன் தம்பி மட்டும் தான் என
பேசினார்.








