நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றி நள்ளிரவு காலமானார்.
இதையடுத்து, நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா, மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ வடிவேலு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். முன்னதாக தொலைப்பேசியிலும் நடிகர் வடிவேலுவை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்கள் பலரும் நடிகர் வடிவேலுவுக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.







