நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்’ விருது!

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த இயற்கை…

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006ம் ஆண்டு தொடங்கி
வைக்கப்பட்டு,  மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல்ஜெயராமனால்
தேசிய அளவிலான நெல் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.

இந்த ஆண்டும் ஆதிரெங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய முன்னோடி உழவர்களின் தலைமையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஸ்ரீகிருஷ்ணா திருமண அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து சுமார் 5,000 மேற்பட்ட உழவர்கள் பங்கேற்றனர்.  தேசிய நெல் திருவிழாவில் உழவர்களின் பேரணி, கருத்தரங்கம், பாரம்பரிய விதை நெல் வழங்கல், கண்காட்சி, கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய நெல் திருவிழாவின் முதல் நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில்
பாரம்பரிய நெல் கோட்டையை வைத்து காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு
நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் உருவப்படங்களுடன் மங்கள இசையுடன் 500 க்கும் மேற்பட்ட உழவர்கள் பங்கேற்கும் பேரணி புறப்பட்டு ஊர்வலமாக திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையிலிருந்து விழா மண்டபத்தை வந்தடைந்து.  அப்போது மானாட்டம், மயிலாட்டம்,  தப்பாட்டத்துடன் சென்றனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல்ஜெயராமன் உருவப்படங்கள்
திறக்கப்பட்டு மறைந்த முன்னோடி உழவர்களுக்கும் உழவர்கள் மற்றும் பொதுமக்கள்
அஞ்சலி செலுத்தினர்.  பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமனால் மீட்டெடுக்கப்பட்ட சீரகசம்பா,  மாப்பிள்ளை சம்பா,  கருப்பு கவுனி உள்ளிட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான நெல் திருவிழாவில் கலந்து கொள்ளும் உழவர்களுக்கு தலா 2 கிலோ
பாரம்பரிய விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.  அவருக்கு விவசாயிகள் நெல் கதிர் மற்றும் ஏர் கலப்பை பரிசாக வழங்கினர்.  மேலும்,  நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!

தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது :

“நெல் ஜெயராமன் மிகப்பெரிய புரட்சியை சத்தம் இல்லாமல் உருவாக்கியுள்ளார்.
நெல் ஜெயராமனுக்கு நான் செய்தது உதவி அல்ல கடமை.  வேடிக்கை பார்த்த என்னை
மேடை ஏற்றியது நீங்கள் தான். எ ன்னால் இயன்றதை கடைசி வரை நான் இந்த
விவசாயிகளுக்காக செய்து கொண்டே இருப்பேன்.  தேசிய நெல் திருவிழா உலகம்
முழுவதும் பேசப்படும் .  இந்த திருவிழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.  நிச்சயமாக என்னால் இயன்றவரை
செய்து உழவர்களின் தோழனாக இருப்பேன்”

இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.