உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பல முன்னணி நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். தனது சீரிய நடிப்பால் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த சரத்பாபு, தனது 71வது வயதில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.







