சின்னத்திரை நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் அறையில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சித்ராவை உயிரிழப்பு க்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இதனிடையே, ஹேம்நாத் மீது தொடரப்பட்ட மற்றொரு மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், இரு வழக்குகள் குறித்து விசாரணை நடத்த ஏதுவாக, சித்ரா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நசரத்பேட்டை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.







