சின்னத்திரை படப்பிடிப்பின்போது உதவி இயக்குநரை கதாநாயகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே கிருஷ்ணா நகர் 1வது தெரு பகுதியில் தனியார் ஷூட்டிங் வீடு அமைந்துள்ளது. இங்கு ”கண்ட நாள் முதல் ”என்ற தொலைக்காட்சி தொடர் எடுக்கப்பட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வருகிறது . தொடரின் படபிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன், அதே சீரியலின் உதவி இயக்குனரான குணசேகர் என்பவரை தாக்கியுள்ளார் இதில் குணசேகரனுக்கு மூக்கு மற்றும் கன்னம் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குணசேகரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “தொலைக்காட்சி தொடரில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இதில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன் என்பவரை சீன் எடுக்க நேரமாகிவிட்டது, வாருங்கள் என்று அழைத்தேன். அதற்கு அவரோ, எல்லாம் எனக்கு தெரியும் என்று கூறி, என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்தார்” என விவரித்துள்ளார்.
இதனையடுத்து இரு இரு தரப்பையும் அழைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .அப்பொழுது தங்கள் சங்கத்தின் மூலம் பேசிக்கொள்வதாக அங்கிருந்து இரு தரப்பினரும் கிளம்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது, மேலும் சின்னத்திரை சீரியலின் சூட்டிங் போது உதவி இயக்குனரை தாக்கிய கதாநாயகனால் சின்னத்திரை சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .







