ஈவ்டீசிங் வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி சுஜித்குமார் உறுதியளித்தார். இதையடுத்து மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்கி சென்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக மாணவியின் தாயார் பெல் காவல்நிலையதில் புகார் அளித்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவியின் இறப்பிற்கு இளைஞர்கள் தான் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று நேற்று காலை முதலே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோரை பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் சந்தித்து பேசினர். இதனையடுத்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார். ஆனால் கொலை வழக்காக பதிவு செய்ய முடியாது என்று நேற்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதனிடையில் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்ட 18 கிராம மக்கள் மீது திருவெறும்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்துவரும் தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்த கரன் என்கிற இளைஞர் மீது உயிரிழப்புக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த வழக்கில் மேலும் 2 இளைஞர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்து விட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனையில் உடலைப் பெற்றுக்கொண்டனர்.