சென்னை, அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கொரட்டூரைச்சேர்ந்த சிட்டிசன் ஃபோரம் என்ற அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல்
செய்திருந்தார். அந்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அடையாறு ஆற்றின் கரைப் பகுதி ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மாற்று இடம் தரும் திட்டம் கொண்டு வரப்பட்டும் அது முழுமையாக அமல்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று
விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலம் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.
மேலும், தடை உத்தரவு இல்லாத இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு
வருவதாகவும், ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.
-ம.பவித்ரா








