அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் எனவும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 21 கல்லூரிகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஏற்கனவே 10% இருக்கும் கூடுதல் மாணவர் சேர்க்கையை, 15%-ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.







