5.5 லட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் துறைகளையும் ஒருங்கிணைத்து, 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருந்தார். இதற்காக ரூ1.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான தொடக்க நிகழ்வு சென்னை, இராணி மேரி கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சி.வெ.கணேசன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இளைஞர் திறன் திருவிழாவை முதகமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து கலந்தாய்வுக் கூடங்களையும் பார்வையிட்டு, இளைஞர்களுடன் கலந்துரையாடினார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டு பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்.
இளைஞர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி சான்றிதழ், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கிய முதலமைச்சர், 608 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, காய்கறி, பழ வியாபாரம், மளிகைக்கடை, சிறு பெட்டிக்கடை, தையல் நிலையம் போன்ற தொழில்கள் நடத்துவதற்கு ரூ 25.66 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விழாவை 2 அமைச்சர்களும் சேர்ந்து நடத்தும்போது பரந்த மனப்பான்மை தெளிவாக தெரிகிறது. இதே தன்மை தொடர வேண்டும். இதையே மற்ற அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
1915ம் ஆண்டு இராணி மேரி கல்லூரி கேப்பர் இல்லத்தில் தொடங்கப்பட்டது. வாழ்க்கையில் மிக மிக மறக்கமுடியாத கல்லூரி. இந்த கல்லூரியை இடிப்பதற்கு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முயற்சிகள் நடந்தது. இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை கதவை திறந்து சந்தித்து திரும்பிச் சென்றேன். பூட்டியிருந்த கல்லூரியில் ஏறி குதித்து மாணவிகளை தூண்டி விட்டதாக கைது செய்தார்கள். அற்காக கடலூர் சிறையில் இருந்தேன். இந்த கல்லூரியில் எனக்கும் உரிமை உண்டு என தலை நிமிர்ந்து சொல்கிறேன்.
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர் என்றால் மாணவர்கள் தான் என்று பொருள் அல்ல, மாணவிகளும் இருக்கிறீர்கள். இளைஞர் சக்தியை ஊக்குவிக்க கல்வியை தந்தாக வேண்டும். உழைப்புச் சக்கரத்தை முழுமையாக உருவாக்கக்கூடிய அரசு தான் திமுக அரசு. வேலை இல்லை என்ற நிலை ஒருபக்கம் இருக்கக்கூடிய நிலையில், வேலைக்கு தகுதியான இளைஞர்கள் இல்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனை இல்லாமல் ஆக்க அரசு செயல்படுகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அரசுக்கல்லூரிகளில் பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. நம் மாநிலத்தின் இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் . ஒவ்வொரு ஆண்டும் 5.50 இலட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அனைவருக்கும் அனைத்து சேவையும் வழங்கிடும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கும் என தெரிவித்தார்.