காமன்வெல்த் போட்டியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அச்சின்தா ஷூலி பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் 73 கிலோ ஆண்கள் பிரிவில் பங்கேற்ற அச்சின்தா ஷூலி, ஸ்னாச் சுற்றில் 143 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார்.
இதனையடுத்து நடைபெற்ற க்ளீன் அன்டு ஜெர்க் பிரிவில் 170 கிாலோ எடையை தூக்கினார். க்ளீன் அன்டு ஜெர்க் பிரிவில் 2வது முயற்சியாக 176 கிலோ எடையை அச்சின்தா ஷூலி தூக்க முயன்றார். எனினும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இருந்தபோதும், ஸ்னாச் சுற்றில் 143 கிலோ மற்றும் க்ளீன் அன்டு ஜெர்க் பிரிவில் 170 என மொத்தம் 313 கிலோ எடையை அச்சின்தா ஷூலி தூக்கினார். வேறு யாரும் இவ்விரு பிரிவுகளிலும் 313 கிலோ எடையை நெருங்காததால், அச்சின்தா ஷூலிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
தங்கப் பதக்கம் வென்றது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அச்சின்தா ஷூலி, தனது நீண்ட நாள் கனவு நனவாகி இருப்பதாகவும், இந்த பதக்கத்தை தனது சகோதரனுக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார். அடுத்து ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆண்களுக்கான 67 கிலோ பளுதுாக்குதல் போட்டியில் ஜெரிமி லால்ரின்னுங்கா நேற்று தங்கப் பதக்கம் வென்றார். இவர், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் முதலில் 136 கிலோ எடையையும், ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 160 கிலோ எடையையும் துாக்கி தங்கப்பதக்கம் வென்றார். 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
22 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என 52 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 11 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலத்துடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்ரிக்கா, கனடா ஆகிய நாடுகள் 4 மற்றும் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது









