நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு நிறைவுபெற்றது.
இதில், குறிப்பிட்ட வார்டுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தன. இதனை அடுத்து புகார்கள் எழுந்துள்ள சென்னை, மதுரை உள்பட ஐந்து வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 1 வாக்குச்சாவடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள், திருவண்ணாமலை நகராட்சியில் இரண்டு 2 என ஐந்து வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







