சமீபத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நகச்சுவை நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நடும் பணியை இனி தான் மேற்கொள்ளப் போவதாக பிரபல நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த தொற்றுக்கெதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் விவேக் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பு திரையுலகத்திற்கு மட்டுமல்லாது, முற்போக்கு பேசும் சமூகத்தினருக்கும் பேரிழப்பாக இருந்தது. அவரின் மரங்கள் நடும் இயக்கமானது மக்கள் மத்தியில் தற்போது மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரது ரசிகர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான ஆத்மிகா விவேக்கின் பணியை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தனது வீட்டில் மரக்கன்றை நட்டு பணியை முன்னெடுத்துள்ளார்.
இது குறித்து ஆத்மிகா, “நடிகர் விவேக் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக விவேக்கின் இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த ரசிகர்கள் கைகளில் மரக்கன்றுகளை ஏந்தி ஊர்வலமாக சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







