கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடைப்பயணமாகவே 4 நாடுகள் வழியாக 8,600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் கடந்து இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை அடைந்துள்ளார்.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இந்த பயணத்தை கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 நாடுகள் வழியாக நடந்தே சென்று நிறைவு செய்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியைச் சேர்ந்தவர், ஷிஹாப் சோட்டூர். இவர், தனது யூடியூப் சேனலில், தன்னுடைய பயணம் குறித்த வீடியோ பதிவுகளை அதில் வெளியிட்டு வந்தார்.
இவர் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி தொடங்கிய ஹஜ் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவர் தன்னுடைய நடைப்பயணத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து, இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார்.








