பரமக்குடி அருகே பறவைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பதற்காக பட்டாசுகள் வெடிக்காமல் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் கிராம மக்களின் செயல் மற்றவர்களுக்கு சிறந்தமுன்னுதாரணமாக அமைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியதிற்குட்பட்ட தேர்தங்கல் கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தில் இருந்தே இந்த சரணாலையத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அந்த கிராமத்தில் அழகிய வண்ணப் பறவைகளின் கூட்டத்தை காணமுடிகிறது. சிறகடித்துப் பறக்கும் புள்ளினங்கள் தேர்தங்கல் கிராம மக்களின் செல்லப் பிள்ளைகளாகவே வலம் வருகின்றன. பறவைகள் அதிக அளவில் அந்த கிராமத்துக்கு படையெடுத்து வருவதற்கு ஊர்மக்களின் முழு ஒத்துழைப்பே காரணமாக அமைந்துள்ளது.
தங்கள் கிராமத்தில் தஞ்சமடைந்த பறவைகளுக்கு திருவிழா காலத்திலும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக பட்டாசுகள் இல்லாமல் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட தேர்தங்கல் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இனப்பெருக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வரும் பறவைகளுக்கு பட்டாசு சத்தத்தால் அச்ச உணர்வு ஏற்படக் கூடாது என்பதற்காக தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசுகளை தவிர்ப்பதாக தேர்தங்கல் கிராம மக்கள் கூறுகின்றனர்.