மேட்டுப்பாளையம் அருகே ஹில்கிரோ பகுதியில் மலை ரயிலை வழிமறித்த யானையால் ரயில் குன்னூர் செல்ல தாமதமானது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணிக்க ஏராளமானோர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் வனப்பகுதியில் பயணிக்கும் இந்த ரயில் பாதையில் அடிக்கடி யானைகள் நடமாட்டமும் இருந்து வருவது வழக்கமான நிகழ்வு. இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயிலை யானை ஒன்று ஹில்கிரோ ரயில் நிலையம் பகுதியில் வழிமறித்ததால் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மலைரயில் தண்டவாளத்தில் ரயிலுக்கு முன்பாக நடந்தவாறு அங்கும் இங்குமாக யானை உலாவியதால் சற்று நேரம் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. பின்பு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற பின் எஞ்சின் ஓட்டுநர் குன்னூர் நோக்கி ரயிலை இயக்கினார். இதனால் அரை மணி நேரம் மலை ரயில் தாமதமாக குன்னூர் சென்றது. ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் யானையை வீடியோ பதிவு செய்தனர்.







