அண்ணாமலையின் கருத்து குறித்து கவலையில்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட…

அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், இதற்கு கூடுதல் கவனம் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை அந்தக் கட்சியினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக மாநாட்டு அழைப்பிதழை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தங்களது கட்சித்தொண்டர்களுடன் இணைந்து மீனாட்சியம்மன் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினார். இதனை தொடர்ந்து இஸ்லாமியர்களின் புனித தலமான கோரிப்பாளையம் தர்ஹா, கிறிஸ்தவர்களின் புனித தலமான புனித மரியன்னை தேவாலயம் ஆகிய தலங்களிலும் அழைப்பிதழ்களை வைத்து வழிபாடு நடத்தினார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது;

மதுரையில் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற உள்ள அதிமுகவின் பொன்விழா மாநாடு, அரசியல் மாநாடாக நடைபெறுகிறது. இந்த மாநாடு நிச்சயம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். மதுரை மக்கள் மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம். அதிமுக மாநாட்டுக்கு பல்வேறு
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வரும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 10,000 சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3 இடங்களில் 300 கவுன்ட்டர்கள் அமைத்து உணவு வழங்கப்பட இருகிறது. இசையமைப்பாளர் தேவா கச்சேரி, மதுரை முத்து, ராஜலெட்சுமி – கணேஷ் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

செந்தில்பாலாஜியால் திமுகவின் அனைத்து அமைச்சர்களுக்கும் தூக்கம் இல்லாமல் பதற்றதுடன் தவித்து வருகிறார்கள். வெண்ணெய் தின்ற கண்ணன் வாயை திறந்த போது உலகமே தெரிந்தது போல, செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போக போகிறார்கள் என தெரியவில்லை.

அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 10 ஆம் தேதி ரிலீஸ். அதிமுக மாநாட்டின் மெயின் பிக்சர் 20 ஆம் தேதி வெளியாகும். தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா போல அதிமுக மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துளளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.