சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீட்டுக்கு நள்ளிரவு வந்த சேலத்தை சோ்ந்த பள்ளி மாணவியை மீட்டு, அவரது உறவினா்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனா்.
நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க அவர் போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் அலைகடலென திரண்டுவருவது அனைவரும் அறிந்ததே. படப்பிடிப்பு முடிந்து அவர் கோயில்களுக்கு செல்லும்போது, இசை வெளியீட்டு விழாவில், ஷூட்டிங் ஸ்பாட்களில் என்று எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் விடுவதில்லை.
சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வசித்துவருகிறார். அவர் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 15 வயது மதிக்கதக்க ஒரு சிறுமி வந்தார். அவர் ரஜினிகாந்த் வீட்டின் கேட்டை தட்டியதும், அங்கிருந்த காவலாளி வெளியே வந்துள்ளார். அவர், சிறுமியிடம் என்ன என்று விசாரித்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி சேலம் பெத்த நாயக்கம் பாளையம் சமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர் என்பதும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிப்பதும், ரஜினியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டில் பள்ளிக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்னைக்கு பேருந்தில் வந்திருப்பதும் தெரியவந்தது.
இதைக் கேட்ட காவலாளி, உடனே தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அந்த மாணவியை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் கைப்பேசி மூலம் பேச வைத்தனர். பின்னர், அந்த சிறுமியை சென்னை அருகே பல்லாவரம் பம்மலில் வசிக்கும் அவர் பாட்டி வீட்டில் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோரை விட்டு பிரிந்து வரக் கூடாது என்றும் போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.







