தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இருந்து பாரம்பரியமிக்க ஓவியம் காணாம போன வழக்குல புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதை திருடியது யார்? போலீஸ் விசாரணையில் வெளியான பின்னணி என்ன என்பதை பார்ப்போம் வாருங்கள்.
பாதுகாக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள், தமிழர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் சிலைகள் போன்றவை கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்கப்படும் அரிய பொக்கிஷங்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு.
கடந்த 2017 ஆம ஆண்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புகார் ஒன்று வந்தது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் கடந்த 1822-1827 காலகட்டத்தில் வரையப்பட்டு வைக்கப்பட்டிருந்த சரபோஜி – சிவாஜி மன்னர்களின் வரலாற்று சிறப்பு மிக்க ஓவியம் திருடப்பட்டிருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து கொடுக்கும்படியும் கூறப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த ஓவியம் இப்போது இருக்கும் இடம் அமெரிக்கா. போலீசார் ஓவியத்தை கண்டு பிடித்தது எப்படி? பாண்டிச்சேரியில் ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த சிலைகளை போலீசார் மிட்ட பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் கடந்த 1822-1827 காலகட்டத்தில் வரையப்பட்டு வைக்கப்பட்டிருந்த சரபோஜி – சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் ஓவியம் திருடுபோயுள்ளதாகவும், அதை கண்டுபிடிக்குமாறும் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஓவியம் தொடர்பான தகவல்கள் குறித்து பிற நாட்டில் உள்ள பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும், அருங்காட்சியகங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த முயற்சியில் தொன்மையான சரபோஜி – சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் அந்த ஓவியமானது அமெரிக்காவில் உள்ள PEM என்ற அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டதும், பின் முறையான ஆவணங்கள் இல்லாததால் அமெரிக்காவின் ஹோம்லாண்ட் செக்யூரிட்டி மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், போலியான ஆவணங்கள் கொடுத்து அமெரிக்காவில் உள்ள PEM அருங்காட்சியகத்தில் அந்த
ஓவியத்தை 35 ஆயிரம் டாலருக்கு விற்றதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஹோம்லாண்ட் செக்யூரிட்டியால் அந்த ஓவியம் பறிமுதல் செய்யப்பட்டும், 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து அந்த ஓவியத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்தே தற்போது இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த ஓவியத்தை
இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட, முதல் முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “புதிய ஏற்பாடு” பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் கும்பகோணம் அருகே உள்ள தனியார் சிலை விற்பனை நிலையத்தில் இருந்து தொன்மையான சிலைகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து ஆறு சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கம் என்பவரை கைது செய்தனர்.

நேற்று நடைபெற்ற சோதனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பல்வேறு சிலைகளை விற்பதற்கான தடை இல்லா சான்று பெறுவதற்கு தொல்லியல் துறையை ராமலிங்கம் நாடியது தெரியவந்தது. இது தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சோதனையில் சிக்கியதையடுத்து அந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று பாண்டிச்சேரி அருகே உள்ள மற்றொரு தனியார் சிலை விற்பனை நிறுவனத்திற்கு சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கிருந்து இரண்டு தொன்மையான உலோக சிலைகளை மீட்டுள்ளனர். மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் மற்றும் புத்தர் ஆகிய இரண்டு உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரியில் இந்தியன் பொட்டிக் என்கிற சிலை விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்த நபர் இந்த இரண்டு சிலைகளுக்கான உரிய ஆவணத்தை தருவதாக கூறியதையடுத்து அவருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இரண்டு சிலைகளுக்கும் சட்டபூர்வமான எந்த ஆவணங்களும் தற்போது இல்லாத நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்.








