கிருஷ்ணகிரியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நடைபெற்ற மாபெரும் கல்வி கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அமோக ஆதரவுடன் நிறைவு பெற்றது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்வி கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவை, மதுரை, சென்னை, சேலம் ஆகிய இடங்களில் கல்வி கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நியூஸ் 7 தமிழ் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில், இந்த கல்வி கண்காட்சியை, அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுக்கு பின் நடத்தும் முதல் கல்வி கண்காட்சி இது என்று குறிப்பிட்டார். மதிப்பெண்கள் கையில் வந்த பிறகு தான் மாணவர்களுக்கு குழப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், கல்வி கண்காட்சியை தற்போது நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு கிருஷ்ணகிரியில் நடத்துவதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை, கல்விதான் நம்மை மேம்படுத்தும் என்று கூறினார். இந்த கல்வி கண்காட்சியை நடத்தும் நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்த தம்பிதுரை, இந்த கண்காட்சியை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்து கல்லூரிகளையும் திறக்க வேண்டும் என்றும், கலந்தாய்வு காரணமாக கல்லூரிகள் திறப்பதை தாமதப்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நியூஸ் 7 தமிழ் கண்காட்சியில், தமிழ்நாட்டில் உள்ள முன்னணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, ஆகியவற்றில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கல்வி வல்லுநர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை தொடர்பாக கல்வி கண்காட்சியில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முதல் நாள் கண்காட்சியில் பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக மதிபெண்கள் பெற்ற முதல் 5 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. நாடாளுமன்ற அதிமுக குழு தலைவர் தம்பிதுரை, நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் ஆகியோர் மாணவர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினர்.
2வது நாள் கண்காட்சியில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு, கல்வி ஊக்கத்தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனை கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் நவாப் சார்பில் நகர மன்ற தலைவர் பரிதா வழங்கினார்.
நியூஸ் 7 தமிழ் நடத்தும் கல்வி கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று, அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்ததாக, அரங்குகள் அமைத்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.