ரசிகர்களின் கோப்பை கனவை நிறைவேற்றிய ‘கூல் கேப்டன்’ !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்த நாள். அவர் 42ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவருக்கு கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்த நாள். அவர் 42ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவருக்கு கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Dhoni is my hero…இந்த வார்த்தைகளை கூறியது தோனியின் ரசிகர்களோ, அவரது அபிமானிகளோ கிடையாது, இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிய கபில் தேவின் வார்த்தைகள் இவை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறைக்க முடியாத, மறுக்க முடியாத வரலாற்று நாயகன் இந்த தோனி.

மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களை சேர்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த வேளையில், ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி என்ற சிறிய நகரில் இருந்து வந்து இந்திய கிரிக்கெட் உலகை 16 ஆண்டுகள் கட்டி ஆண்டார்.

ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக தனது வாழ்வை தொடங்கிய தோனி, பிற்காலத்தில் இந்திய கிரிக்கெட்டிற்கு கோப்பை கலெக்டராக மாறினார். 2004ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய தோனி, தன்னுடைய தனித்துவமான ஆட்டத்தால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

2007ம் ஆண்டு உலக கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியின் பிடியில் தத்தளித்து கொண்டிருந்த சமயத்தில் இளம் படையுடன் தென்ஆப்பிரிக்கா சென்றார் தோனி. அந்த தொடரில் பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்து கிரிக்கெட்டின் முதல் இருபது ஓவர் கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார். அதிலும் இறுதி போட்டியில் தோனியின் மாறுபட்ட சிந்தனையால் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.

அதன் பிறகு இந்திய ரசிகர்களின் 28 வருட கனவை நிறைவேற்றும் விதமாக 2011ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று, ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையும் பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனி, சென்னை அணியை ஐபிஎல்-இன் ஆகச் சிறந்த அணியாக மாற்றினார்.

குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தோனி.

ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து 50 சராசரியையும் வைத்திருந்த வெகு சில வீரர்களில் தோனியும் ஒருவர். இவ்வாறு பேட்ஸ்மனாக, விக்கெட் கீப்பராக, கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு ஓய்வு பெற்ற தோனி என்றும் இந்திய ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.